தென் கொரிய தலைநகரில் இன்று உச்சக்கட்ட அரசியல் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலை கைது செய்ய அதிகாரிகள் சென்றபோது, அவர்களை இராணுவத்தினரும் ஆதரவாளர்களும் தடுத்தமை காரணமாக, சுமார் 6 மணி நேரமாக, ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த டிசம்பர் 3ஆம் திகதி, தென் கொரியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், இராணுவ சட்டத்தை பிறப்பித்தமை தொடர்பில், ஜனாதிபதி யூன் குற்றவியல் விசாரணைக்கு உட்பட்டுள்ளார்.
அத்துடன் அவருக்கு எதிராக கைது உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது
எனினும் இன்று அவருக்கு ஆதரவாக படை தரப்பு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, அவரை கைது செய்வதை அதிகாரிகள் கைவிட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான விசாரணை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஊழல் தடுப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இன்று காலை 7 மணியளவில், ஜனாதிபதியை கைது செய்ய சென்றபோது, படைத்தரப்பினரும், ஆதரவாளர்களும், அவர்களை தடுத்துள்ளனர்.
தமது உயிர் இருக்கும் வரை ஜனாதிபதி கைது செய்ய முடியாது என்று அவர்கள் கோஷமிட்டுள்ளனர்.
எனினும், கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி பதவி நீக்கம் செய்யப்பட்டு அதிகாரத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன், இன்றைய முற்றுகையின் போது, அங்கு இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.